புதன், 16 மே, 2012

வழக்கு எண்ணும் என் எண்ணமும்


நான் எத்தனையோ திரைப்படம் பார்த்திருக்கிறேன், நான் பார்த்த படங்களில் பல படங்கள் எனக்குள் ஒரு விதமான தாக்கத்தை ஏற்படுத்தயுள்ளன. எத்தனையோ படங்களைப்பற்றி எனக்குள் ஏற்பட்ட எண்ணங்களை பதிவு செய்ய வேண்டுமென நினைப்பேன் ஆனால் ஏனோ தெரியவில்லை இதுவரை ஒன்று கூட எழுதியது இல்லை, தொலைக்கட்சிகளில் சொல்வதைப்போல முதல் முறையாக என்னை எழுத தூண்டிய படம் வழக்கு எண்: 
படத்தைப்பற்றி நான் விமர்சனம் செய்யவில்லை நண்பர்களே. அந்த படத்தில் நான் கற்றுக்கொண்ட, எனக்குள் ஏற்பட்ட எண்ணங்களை தான் கிறுக்குகிறேன் நான் சொல்வது உங்களுக்கு புரிந்தாலும் சரி புரியவில்லை என்றாலும் சரி சொல்ல வேண்டிய நிலையில் நான் உள்ளேன் என்பதை உங்களுக்கு சொல்லிக் கொள்கிறேன். ஏனென்றால் நமக்கு 
பிடித்தமான செய்தியை யாரிடமாவது சொல்லாமல் விட்டுவிட்டால் மண்டை வெடிச்சிடும்னு சொல்வோம்ல அந்த மாதிரி தான் இதும். விசயத்திற்கு வருவோம்.
காதல். இந்த சொல்லில் உள்ள அற்புதமான வாழ்க்கை எத்தனையோ பேருக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திருக்கிறது. அதே போல் தான் திரு.பாலாஜி சக்திவேலுக்கும் மாற்றத்தை கொண்டுவந்தது, இந்த ஒரு படத்தின் மூலம் அனைவரது பார்வையும் அவர்மேல விழுந்தது.காதல்-கல்லூரி-வழக்கு எண்,இந்த மூன்று படத்திலேயும் ஒரு ஒற்றுமை உண்டு நீங்கள் யோசியுங்கள் உங்களுக்கே புரியும். 
நான் எந்த படம் பார்த்தாலும் அதிலுள்ள திரைக்கதை எப்படி கொண்டு சென்றுள்ளனர் என்பதை பார்ப்பேன் அதே போல இந்த படத்திலும் பார்த்தேன். ஒரு திரைப்படத்திற்கு திரைக்கதை எந்த அளவுக்கு முக்கியத்துவம் என்பதை வழக்கு எண் நிருபித்துள்ளது. படத்தின் ஆரம்பத்தில் ஒரு பெண் அழுகிறாள்.ஏன்.? எதற்கு.?எப்படி.?எங்கே.?எதனால்.?யாரால்.?அங்கிருந்து கதை பிளாஷ் பேக்குடன் நகர்கிறது. இவற்றிற்கு விடை படத்தின் முடிவில் ஒரு பெண் அழுகிறாள். இதற்கு இடைப்பட்ட நிகழ்வின் தொகுப்பே வழக்கு எண்.  படத்தில் சண்டை, ஓபனிங் சாங், குத்து பாடல், பஞ்ச் டயலாக் இப்படி ஏதும் இல்லாமல் படமெடுத்த இயக்குனர்க்கு என் ராயல் சல்யுட்.
 திரைக்கதை தான் படத்தின் முதல் கதாப்பாத்திரம் என்று சொல்லுமளவிற்கு ஒரு மாற்றத்தை கொண்டுவந்துள்ளார். முதல் பாதியில் இல்லாத இருவரை, இரண்டாம் பாதியில் மிகவும் முக்கியமாக வைத்து இத்தனைக்கும் முதல் பகுதியில் இந்த இருவரை {தினேஷ் ஆர்த்தி} வருவார்கள், ஆனால் யாரோ ஒருவர் என்று தோன்றும் அளவிற்கு தான் இருவரையும் வைத்துள்ளார். 
ஜோதி, வேலு, ஆர்த்தி, தினேஷ், சின்னசாமி, ஜோதியினுடைய அம்மா, தள்ளு வண்டி முதலாளி, ரோசி இப்படி அனைத்து கதாப்பத்திரதிற்கும் இயல்பாகவும், ரசனையாகவும் வைத்துள்ளார். ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் அழகாக வைத்துள்ளார் என்பதைவிட தேவைக்கேற்ப பயன்படுத்தியுள்ளார் என்பதே சரியானவையாகும்.
ரோசி என்ற விலைமாது கதாப்பாத்திரமும் மனித தன்மையுடன் தொடங்கி-மனிதமனம் இருக்கும்வரை ஆடும் இல்லாதபோது ஓடும் என்பதோடு முடித்துள்ளார், வேலு ரோசிக்கு தருகிற பணத்தை வைத்து ரோசி பூக்காரி ஆகிவிட்டால் என்பதை ரோசியிடம் வேல் தரும்போதே பின்னணியில் வாய்ஸ் ஓவரில் காட்சிபடுத்தி இருப்பார். மன நலம் குன்றிய சிறுவனை ஆதரித்து ஜோதி பேசும்போது நமக்கு ஏன் அப்படி மன நலம் பாதிக்க பட்டவங்களை நினைக்ககூட தோன்ற மட்டேன்குதுனு தான் தெரியல. தன் துறைசார்ந்த விஷயங்களை தனக்கே உரிய முறையில் கொடுத்துள்ளார் இதனை ஏற்கனவே காதல் படத்தில் வைத்திருப்பார். சினிமாவிற்கும் தெருக்கூத்திற்கும் உள்ள இடைவெளிகளைகளையும், சின்னசாமி கதாபாத்திரத்தின் பின்னூட்டமாக காலத்தின் மாற்றத்தால் தெருக்கூத்து எந்தளவிற்கு  மாற்றம் அடைந்தது எனக்கூறி இப்பொழுது எந்த மாதிரி உள்ளதை ஒரு வசனத்தின் மூலம் தெரியபடுத்தியுள்ளார், சின்னசாமி கதாப்பாத்திரம் என்னை கவர்ந்தது. காரணம் அழிந்துவரும் தெருக்கூத்து பத்தி கூரும் போது என் உணர்ச்சியை பட்டியல் தான் இட  வேண்டும் காரணம் என் அப்பா தெருக்கூத்து நடத்தி தான் என்னை வளர்த்தார், படிக்க வைத்தார், ஆனால் என் அப்பா தெருக்கூத்து ஆடுவதை நான் பார்த்ததில்லை அதை பற்றி இன்னொரு கட்டுரையில் எழுதுகிறேன். படம் முடிந்து வெளிவரும்போது சின்னசாமியை போலவே ஒருவனை சாலையில் பார்த்தேன் என்னை மறந்து நன் அவனை பார்த்துக்கொண்டே இருந்தேன் அவன் சாலையைவிட்டு மறையும்வரை...,  வேலுவின் பின்னூட்டமாக விளை நிலங்கள் விலை நிலங்களாக மாறுகின்ற சமுதாய சிக்கல்களையும் காட்டியுள்ளார் இயக்குனர். இண்டர்வல் அப்போ ஆர்த்தி வேலுவை போலவே இன்னொருத்தனையும் விசாரிங்க என்று சொல்லும் போது ஏதும் படத்தில் இல்லை ஆனால் ஏதோ ஒன்று முக்கியமாக உள்ளது என்று தோன்றுகிறது.... போலீஸ் கதாப்பாத்திரம் தான் நமக்குள் ஒரு விதமான போதையோடு இருக்கிற மாதிரி தோன்றுகிறது காரணம், அவர் மாணவர்களை ஒரு வார்த்தையில் திட்டுவதகாட்டும், தனக்கே உரிய முறையில் லஞ்சம் வாங்குவதாகட்டும் ஒரு போதை நமக்குள் வீசுகிறது. படத்தில் அங்காங்கே பாட்டில்கள் தோன்றும் அது ஏதோ சமுதாய பிரச்சனையை நமக்கு காட்டுகிறார் என்றாலும் அந்த பாட்டில்களுக்கும் ஒரு முக்கியமான பாத்திரம் உள்ளது என்று நீங்கள் படம் பார்க்கும்போது கண்டிப்பாக புரியம். 
 படத்தில் முக்கியமான இடம் என்றால் கடைசி கோர்ட் சீன் தான், நான் யாரு தெரியுமா.? என்று ஜோதி கேட்கும் போது ஏற்படுகின்ற ஒரு கோவம் இருக்கே, ஜோதி எடுக்குற முடிவை யாராலும் நினைக்க முடியாத புது வழி, மற்றும் ஒரு கண்ணில் கோவமும் மற்றொரு கண்ணிலிருந்து வரும் கண்ணீரும் "ஐயோ என்னாலே சொல்ல முடியல...  நான் சினிமாவை நேசிப்பது இதுபோல இருக்கின்ற காட்சிக்காக தான் என்றால் அது மிகையாகது. இதுவரை சோகமான காட்சிகளுக்கு ஒரு வயலின் அல்லது ஏதோ ஒரு விதமான இசை கருவிகளை கொண்டு தான் நம்மை அழவைப்பார்கள் ஆனால் இந்த படத்தில், படத்தின் முடிவில் வானத்தையும் எட்டி புடிப்பேன்.... பூமியையும் சுத்தி வருவேன் ..... இந்த படலை கேட்டாலே நம்மை ஒரு சோகம் வந்து ஆட்கொள்ளும் என்பது உண்மையே... ஜோதி அழுவதும் இந்த பாடல் வருவதும் எப்படி இருந்தது என்றால், நூறு ஈட்டி கண்ணை குத்திவிட்டு விழுந்தால் எப்படி இருக்கும் அது போல.... பின்னணி இசை இல்லாமல் பாடல் வரிகளாலும் மறுத்துப்போய் வாழ்ந்துக்கொண்டிருக்கிற மனிதர்களின் நெஞ்சில் கண்ணீரை எட்டி பார்க்க வைக்கிறது. காதல் என்றால் ஊடல், கூடல் என்று இருக்கும் அதுகூட படத்தில் இல்லாமல், சொல்ல போனால் காதலே இல்லாமல் காதல் தாக்கத்தை படம் முடிந்ததும் எப்படி ஏற்படுத்த முடிந்தது என்று தான் இயக்குனரை பார்த்து கேட்க தோன்றும். உங்களுக்கு சொன்னால் புரியுமா என்று தெரியவில்லை இருந்தும் சொல்கிறேன் குளிர்ந்த நீர் உடம்பில் படும்போது ஏற்படுகின்ற நடுக்கமும், வெந்நீரில் நம் கை சுட்டால் சுளீர் என்று இருக்கிற வலியும், இந்த இரண்டையும் நான் உணர்ந்தேன் மனதில் ஒரு மெல்லிய நடுக்கம் இருந்தது படம் பார்த்து அடுத்த நாள்வரை இந்த நடுக்கம் எனக்குள் இருந்தது. இந்த மாதிரி நடுக்கத்தை எல்லா படமும் நமக்கு ஏற்படுத்துவது இல்லை,  சினிமாவை நேசிக்குற ஒரு பாமரனால் மட்டுமே ஏற்படுத்தக்கூடிய காரியம். என்  தமிழ் சினிமாவும் இன்னும் வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கிறது என்பதற்கு இந்த படம் ஒரு சிறந்த உதாரணம்.
தயவுசெய்து இந்த படத்தை திரையரங்கம் சென்று குடும்பத்துடன் பாருங்கள் அப்போது புரியும் சினிமாவும் நம்மில் இருந்து தான் பிறக்கிறது என்று....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக